Friday 1 February 2013

எழுமின் விழிமின் – 3


ஆத்மீகத்தின் ஊற்றுமுகம்:
ஞானமானது வேறு எந்த நாட்டுக்கும் செல்லுமுன் இந்தப் புராதன பூமியையே தனது வீடாகக் கொண்டிருந்தது. கடலிலே கலக்கத் துள்ளியோடும் இந்த நாட்டு நதிகள் இந்த நாட்டு மக்களிடையே ஆத்மீக வெள்ளம் எப்படிப் பெருக்கெடுத்துப் பாய்கிறது என்பதை உணர்த்துகின்றன. இந்நாட்டில் சிரஞ்சீவியாய் எழுந்து நிற்கும் இமயமலை படிப்படியாக மேலெழுந்து, பனிமுடி அணிந்து, உயர்ந்து வானுலக ரகசியங்களை நோக்குவது போல உள்ளது. உலகில் எல்லாக் காலத்திலும் வாழ்ந்துள்ள முனிவர்களிலே மிகச் சிறந்தவர்களின் திருவடிகள் நடமாடிய பாரதம் இதுவே தான்.
இங்கே தான் முதன்முதலில் மனிதனின் தன்மையைப் பற்றியும், ஆத்மாவின் இயல்பைப் பற்றியும் ஆராய்ச்சிகள் துவங்கின. “மனிதன் நித்தியமான, சிரஞ்சீவியான ஆத்மா ஆவான். அனைவருக்கும் மேலான ஒரு கடவுள் உண்டு; அவர் இயற்கையினுள்ளும், மனிதனுக்குள்ளும், எங்கும் உறைகிறார்” என்ற உண்மைகள் இங்குதான் கண்டுபிடிக்கப் பெற்றன. சமயத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் சிகரமாக விளங்கக்கூடிய பல உன்னதமான கருத்துகளும் இங்குதான் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளன. ஆத்மீக ஞானமும் தத்துவ ஞானமும் இந்த நாட்டிலிருந்துதான் பொங்கித் தாவும் அலைபோல மீண்டும் மீண்டும் வெளியே பாய்ந்து உலகத்தை வெள்ளக் காடாக்கின.
தெய்வநிலை எய்தப் போராட்டம்:
எத்தகைய அற்புதமான நாடு இது! இந்தப் புனித நாட்டில் ஒருவர் நிற்பாராயின், அவர் அந்நியராயினும், அன்றி இந்த மண்ணின் மைந்தராயினும், அவரது ஆத்மா கொடிய விலங்கு நிலைக்குத் தாழ்ந்திராவிடில் அவர், உயிர்த்துடிப்புள்ள சிந்தனை உள்ளம் தன்னைச் சுற்றிலும் சூழ்ந்துள்ளதை உணருவார். அது இந்தப் பூமியின் மிகச் சிறந்த, மிகத் தூய்மையான மைந்தர்களின் உயிர்ச் சிந்தனையாகும். அந்த மைந்தர்கள் நூற்றாண்டுகளாக மனிதனை மிருக உணர்ச்சி நிலையிலிருந்து தெய்வநிலைக்கு உயர்த்தப் பணிபுரிந்தார்கள். அவர்களது முதல் தோற்ற காலத்தைக் கண்டுபிடிப்பதில் சரித்திரம் தோல்வியுற்று விட்டது.
இந்த நாடு தத்துவ ஞானத்துக்குப் புனிதமான இடம். நீதிநெறி ஒழுக்கத்துக்கும் ஆத்மீகத்துக்கும் புனிதமான இடம். தனது மிருக சக்திகளுடன் இடையறாது போராடுகிற மனிதனுக்குச் சிறிது ஓய்வு தந்து, சிந்திக்கத் தூண்டுகிற புனிதமான பூமி இது. மிருக இயல்பாகிற ஆடையை மனிதன் கழற்றி எறிந்து விட்டு அமர ஆத்மாவாகப் பிறப்பு இறப்பு அற்றவனாகவும், எப்பொழுதுமே அருள் பெற்றவனாகவும் விளக்கம் பெற்று எழுந்து நிற்கத் தேவையான பயிற்சிக் களமாக விளங்கும் இந்த நாடு, புனித நாடாகும். மகிழ்ச்சியாகிற பாத்திரம் என்றுமே நிரம்பியிருந்த நாடு இது. அதைவிடத் துன்பமும் நிரம்பித் ததும்பியிருந்தது இங்கே. கடைசி முடிவாக மனிதன் இவையெல்லாம் வெறும் பொய்த் தோற்றம் எனக் கண்டுகொண்டான். முதன் முதலில், இங்கே தான் அவன் அதனைக் கண்டான். இங்கேதான் முதன் முதலாக மனிதன் தனது காலை இளமையிலே,  போகத்தின் மடிமீது கிடந்த போது சக்தி நிரம்பிப் புகழ் ஓங்கியிருந்த நிலையில், மாயையின் விலங்குகளைத் தகர்த்தெறிந்து வெளியேறினான்.
இங்கே, இந்த மனித சமூகக் கடலுக்கிடையே, சுகம்-துக்கம்; பலம்-பலவீனம்; செல்வம்-ஏழ்மை; மகிழ்வு-வருத்தம்; சிரிப்பு-கண்ணீர்; வாழ்வு-சாவு ஆகிய பலமான கடுஞ்சுழல்கள் ஒன்றையொன்று தாக்குவதன் இடையில் எல்லாம் உருகி இணைந்து, அமர சாந்தியும் அமைதியும் நிலவும் வண்ணம் துறவறத்தின் சிம்மாசனம் எழுந்தது.
இங்கே இந்த நாட்டில் வாழ்வையும் மரணத்தையும் பற்றிய பெரும் பிரச்சினைகளை முதன் முதலில் ஆணித்தரமாகப் பற்றிப் பரிகாரம் கண்டார்கள். வாழவேண்டுமென்ற தாகத்தைப் பற்றி ஆராய்ந்தார்கள். வாழ்க்கையை எப்படியாவது பாதுகாப்பதற்காக மனிதன் பித்துப் பிடித்துப் போராடி அதன் விளைவாகத் துன்பங்களைச் சேர்த்துக் குவித்துக் கொண்டான். இந்தப் பிரச்சினையும் ஆராயப்பட்டுத் தீர்க்கப்பட்டது. இந்த நாட்டில் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதைப் போல அதற்கு முன்னர் எங்குமே தீர்க்கப்பட்டதில்லை. இனி வருங்காலத்திலும் தீர்க்கப் படாது. ஏனெனில் இங்கேதான் உண்மையாக உள்ள ஒரு பொருளின் தீய நிழல்தான் வாழ்க்கை என்று கண்டுபிடித்தார்கள்.
இந்த ஒரு நாட்டில்தான் சமயம் நடைமுறையில் வாழ்ந்து காட்டக் கூடியதாக உண்மையானதாக அமைந்தது. பிறநாடுகளில் மக்கள் ஆண்களும் பெண்களும் தம்மைவிட பலம் குறைந்த சகோதரர்களைக் கொள்ளையடித்து வாழ்க்கையின் போகங்களை அனுபவிப்பதற்காகக் கண்மூடித்தனமாகப் பாய்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் மனிதர்கள், ஆண்களும் பெண்களும், பேருண்மை ஒளியைத் தம் அனுபூதிச் செல்வமாகப் பெறுவதற்காகவே துணிவுடன் இறங்குகிறார்கள்.
இங்கே, இந்த நாட்டில் மட்டுமே, மனித உள்ளமானது மனிதர்களை மட்டுமல்ல, பறவைகளையும், மிருகங்களையும், செடி கொடிகளையும் தன்னுடன் சேர்த்து அரவணைக்கும் அளவுக்கு விரிவடைந்தது. மிக உயர்ந்த கடவுளர் முதல் சிறு தூசு வரை மிக உயர்ந்தோரும் மிகத் தாழ்ந்தோரும், எல்லோருமே மிக விரிவாக அகன்று, நீண்டு, ஓங்கி வளர்ந்த மனித உள்ளங்களில் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் இங்குமட்டுந்தான் பிரபஞ்சத்தை ஆராய்ந்து எல்லாமே தொடர்புடைய ஒரே பொருள் தான் எனவும், பிரபஞ்சத்தின் நாடித் துடிப்பு, தன் சொந்த நாடித் துடிப்புதான் எனவும் கண்டார்கள்.
“சாது ஹிந்து”
நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான “சாது ஹிந்து”விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை. “சாது ஹிந்து” என்ற சொல் வசைச் சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப் பெறுகிறது. ஆனால் ஒரு நிந்தனைச் சொல்லில் எப்பொழுதாவது அருமையான ஓர் உண்மை மறைந்திருக்குமாயின், அப்படிப்பட்ட சொல்தான் இந்தச் “சாது ஹிந்து” என்ற சொல். எப்பொழுதுமே “சாது ஹிந்து” கடவுளின் அருள்பெற்ற குழந்தை ஆவான்.
முற்காலத்திலும், இக்காலத்திலும், மிக்க பெருமை வாய்ந்த கருத்துக்கள் வலிமை வாய்ந்த பெருமை மிக்க இனத்தவரிடமிருந்து தோன்றி வந்துள்ளன. முற்காலத்திலும் இக்காலத்திலும் ஆச்சரியமான கருத்துக்கள் ஓர் இனத்திலுருந்து மற்றோர் இனத்துக்குக் கொண்டுசேர்க்கப்பட்டு வந்துள்ளன. முற்காலத்திலும், இக்காலத்திலும், பேருண்மைகள், சக்தி ஆகியவற்றின் விதைகள், முன்னேறிச் செல்லும் தேசீய வாழ்க்கை அலைகளால் வெளிநாடுகளில் விதைக்கப் பெற்றன. ஆனால் நண்பர்களே, கவனியுங்கள்! அக்கருத்துக்கள் யுத்த பேரிகைகளுடன், அணி வகுத்துச் செல்லும் போர்ப் படைகளின் துணையுடன் சென்று பரவின. ஒவ்வொரு கருத்தையும் இரத்த வெள்ளத்தில் ஊறவைக்க வேண்டியிருந்தது. அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லையும் லட்சக்கணக்கானவர்களின் புலம்பலும், அநாதையாக்கப் பட்டவர்களின் அலறலும், விதவைகளின் கண்ணீரும் பின் தொடர்ந்து சென்றன. முக்கியமாக மற்ற நாடுகளின் வரலாறு இதனைக் கற்பிக்கின்றது.
கிரீஸ் என்ற நாடு உண்டாவதற்கு முன்பே, ரோம் நாட்டைப் பற்றி எவருமே சிந்திக்காத பொழுதே, இப்பொழுதிருக்கும் ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் காடுகளில் வசித்து, தமது உடலில் நீல நிறம் தீட்டி வாழ்ந்த பொழுதே இங்கு உயர்ந்த நாகரிகம் இருந்தது. அதற்கும் முன்னரே, சரித்திரம் எட்டிப் புக முடியாத அவ்வளவு பழங்காலத்திலிருந்து, அன்று முதல் இன்று வரை, ஒன்றன் பின் ஒன்றாகப் பல உயர்ந்த கருத்துக்களும் எண்ணங்களும் பாரத நாட்டிலிருந்து அணிவகுத்து வெளியே சென்றன. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆரம்பத்தில் சாந்தியும் முடிவில் வாழ்த்தும் சேர்த்துக் கூறப்பட்டது. நாம் ஒருபோதும் பிற நாடுகளைப் பலாத்காரமாகப் பிடித்ததே இல்லை. அதன் காரணமாகவே பேரருள் பெற்று வாழ்கின்றோம்.
அமரபாரதம்:
முன்னொரு காலத்தில் பெரிய கிரேக்கப் படைகள் அணி வகுத்து வரும் ஒலிகேட்டு உலகம் நடுங்கியது. ஆனால் கிரேக்கர்களின் அந்தப் பழமையான நாடு அடியோடு அழிந்து விட்டது. பின்னால் ஒரு கதை சொல்லக்கூட எஞ்சியிராத நிலையில், நிலப் பரப்பிலிருந்து அது மறைந்து விட்டது. ஒரு காலத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் கழுகுக் கொடி உலகின் பெருமை வாய்ந்த தேசங்கள் அனைத்தின் மீதும் பறந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோம் நாட்டின் சக்தியை மக்கள் உணர்ந்தார்கள். மனிதகுலம் தலைதூக்க முடியாதபடி அந்தச் சக்தி அழுத்தி வந்தது. ரோமின் பெயர் கேட்டு உலகமே நடுங்கியது. ஆனால் அவர்களின் காபிடலைன் மலை (புராதனக் கோயில்) இன்று இடிபாடுகளின் குவியலாகத்தான் இருக்கிறது. சீஸர்கள் ஆண்ட இடத்தில் சிலந்திகள் வலை பின்னுகின்றன. மற்ற நாடுகளும் இது போலவே புகழோடும் சிறப்போடும் தோன்றி மறைந்தன; சில மணி நேரம் ஆரவாரக் களிப்புடன், சுகபோகம் பெருகி வாழ்ந்து, பிறரை ஆக்கிரமித்துத் தீய முறையான தேசீய வாழ்வில் மூழ்கி, நீர்ப் பரப்பின் மீது தோன்றும் குமிழிகள் போல மாய்ந்து மறைந்தன.
ஆயினும் இன்றும் நாம் வாழ்கிறோம். இன்று மனு மீண்டும் வந்தால்கூட திகைப்படைய மாட்டார். இந்த நாடு அவருக்குப் புதிதாகத் தோன்றாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒழுங்குறச் சீர்படுத்தப் பெற்று, சிந்தித்து அமைக்கப்பட்டு வந்த அதே சட்டங்கள் சிற்சில இடங்களில் மட்டும் மாற்றம் பெற்று இன்றும் புழக்கத்தில் உள்ளன. நமது முன்னோர்களின் நுண்ணிய பகுத்தறிவின் விளைவாகவும் பல நூற்றாண்டுகளின் அனுபவ வாயிலாகவும் தோன்றிய பழக்கவழக்கங்கள் சாசுவதமானவை போல் அப்படியேயிருக்கின்றன. அன்றியும் காலம் போகப்போக, அவற்றை துரதிர்ஷ்டம் தாக்கத் தாக்க, அந்தத் தாக்குதல்கள் ஒரே ஒரு பலனைத்தான் உண்டாக்கினதாகத் தோன்றுகிறது – அஃதாவது, அப்பழக்க வழக்கங்கள் மேலும் வலிமை பெற்று நிலைத்துவிட்டன. இதற்கெல்லாம் மையப்புள்ளி, இரத்த ஓட்டத்தின் ஊற்றான இருதயம், தேசீய வாழ்க்கையின் ஊற்று, நமது சமயம்தான். உலகில் நான் பெற்ற அனுபவத்துக்குப் பிறகு கூறுவதை நம்புங்கள்.
பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட அதிர்ச்சிகளையும், நூற்றுக்கணக்கான அன்னியப் படையெடுப்புகளையும், சமாளித்துத் தாங்கிய அதே பாரதம்தான் இன்றும் உள்ளது. உலகில் உடைக்க முடியாத பாறையையும் விட உறுதியுடனும் இறவாத சக்தித் துடிப்புடனும் அழிக்கமுடியாத ஜீவனுடனும் அது பழைய நிலையிலேயே வாழ்கிறது. அதன் வாழ்க்கை ஆத்மாவின் வாழ்க்கையைப் போன்று ஆரம்பமும் முடிவும் அற்று, அமர நிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டின் புதல்வர்களே நாம்.

எழுமின் விழிமின் – 2


நமது புண்ணிய பூமி – அதன் புகழோங்கிய பண்டைக் காலம்
ந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொன்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தம் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை, பரந்த உள்ளத்தின் உச்ச நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆன்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் – அது தான் பாரதமாகும்.
பண்டைக்கால வரலாறு:
பாரதத்தின் பண்டைக்கால வரலாறு முழுவதும் பிரம்மாண்டமான சக்திகளின் பலதரப்பட்ட செயல்வகைகளும், பல்வேறு சக்திகளின் ஒடுக்க முடியாத தாக்குதல்களும் எதிர்த்தாக்குதல்களும் இணைந்து நிறைந்து விளங்குவதாகும். இவையனைத்துக்கும் மேலாக, தெய்வீகப் பரம்பரை ஒன்றின் ஆழ்ந்து பரந்த சிந்தனைக் கருவூலங்களால் நிரம்பியதும் ஆகும். சரித்திரம் என்ற சொல்லுக்கு மன்னர்கள், சக்கரவர்த்திகளின் வரலாறு என்றும், வெற்றுக் கதை என்றும், சமூகத்தின் சித்திரம் என்றும் மட்டும் பொருள் கொள்வதானால் – அவ்வப்பொழுது ஆண்ட மன்னர்கள் தமது தீய விருப்பங்கள், இறுமாப்பு,பேராசை முதலிய தீய குணங்களால் சமூகத்தை ஒடுக்கிய விவரங்களும், மன்னர்களின் நல்ல குணங்கள், தீய குணங்களால் விளைந்த செயல்களின் விவரங்களும், அந்த செயல்களால் சமூகத்தில் என்ன விளைவு ஏற்பட்டது என்ற விவரங்களும் ஆகிய இவை தான் சரித்திரம் என்று கருதப் படுமானால் – அத்தகைய வரலாற்று நூல்கள் பாரதத்துக்குக் கிடையாது என்று கூறிவிடலாம்.
ஆனால் குறிப்பிட்ட சில மன்னர்கள், சக்கரவர்த்திகள் இவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் அவர்களுடைய வம்சாவளியையும் விட, பாரத நாட்டின் எண்ணற்ற சமய இலக்கியங்களின் ஒவ்வொரு வரியும், கடலையொத்த பாடல்களும், தத்துவ ஞான, விஞ்ஞான நூல்களும், உலகில் நாகரிகம் உதயமாவதற்கு முன்பே மனிதக் கூட்டம் பசி தாகத்தினாலும் ஆசை மோகத்தினாலும் தூண்டப் பட்டு எவ்வாறு, எந்தெந்த நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி, மேலே சென்றது என்பதை நமக்கு ஆயிரம் மடங்கு தெளிவாகக் காட்டுகின்றன.
அவர்களுடைய உள்ளத்தை அழகு கொள்ளை கொண்டது. அந்த மக்கள் தொகுதிக்கு மகத்தான, வெல்லுதற்கரிய அறிவுச் சக்தி இருந்தது. பலவிதமான உணர்ச்சிகள் அவர்களுடைய உள்ளங்களில் அலைவீசின. அவர்கள் சிறப்பான ஒரு மேல்நிலையைப் பலவித வழித் துறைகளின் மூலம் எட்டிப் பிடித்தார்கள். இயற்கையுடன் அவர்கள் பற்பல நூற்றாண்டுகளாக நடத்திய போர்களில் எண்ணிலடங்காத வெற்றிகள் பெற்றனர். அப்பொழுது அவர்கள் திரட்டிய வெற்றிக் கொடிகள் மலைபோல் குவிந்தன. ஆனால் அவை சமீப காலமாக, பாதகமான சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் கிழிந்து சிதைந்து போயின. காலப்போக்கினால் அவை மக்கி மாய்ந்தன. இருப்பினும் பண்டைப் பாரதத்தின் புகழ், பெருமைகளை அவை உலகுக்குப் பறைசாற்றுகின்றன.
ஆரிய இனம்:
ந்த மக்கள் இனத்தவர் மத்திய ஆசியாவிலிருந்தோ, வட ஐரோப்பாவிலிருந்தோ, வடதுருவப் பிரதேசங்களிலிருந்தோ புறப்பட்டு மெல்ல முன்னேறி, படிப்படியாகக் கீழே வந்து, கடைசியாகப் பாரதத்தில் குடிபுகுந்து, அதைப் புனிதப் படுத்தினார்களா அல்லது பாரதமாகிற புனித பூமிதான் அவர்களது தாயகமாக விளங்கியதா என்று அறிய நமக்கு இப்போது தக்க சான்றுகள் கிடையா.
அல்லது மிக விரிந்துள்ள இந்த இனம, பாரதத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ வசித்திருந்து இயற்கையின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, தனது ஆதி வீட்டிலிருந்து குடி பெயர்க்கப் பட்டு, காலப் போக்கில் ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் குடிபுக வேண்டி வந்ததா? அந்த மக்கள் நிறம் வெளுப்பா,கறுப்பா? அவர்களது கண்கள் நீலமா, கறுப்பா? அவர்களது தலைமயிர் தங்க நிறமா, கறுப்பு நிறமா? இது போன்ற விவரங்களை எல்லாம் நிரூபிக்க இப்பொழுது போதுமான ஆதாரம் கிடையாது. ஆனால் விதிவிலக்காக ஓர் ஆதாரம் மட்டும் உண்டு, அதாவது சில ஐரோப்பிய மொழிகளுடன் சம்ஸ்கிருதத்துக்கு ஆழ்ந்த உறவு உள்ளது என்பதே அது.
சுவாமி விவேகானந்தர் (பாராநாகூர், 1887)
அதே போன்று, இன்றைய நவீனகால பாரத மக்கள் அனைவரும் கலப்பின்றித் தூய்மையாக அந்த இனத்தின் வழிவந்தவர்கள் தானா? இவர்களின் இரத்தக் குழாய்களில் முந்தைய இனத்தின் இரத்தத்தில் எவ்வளவு அம்சம் ஓடுகிறது? அல்லது அந்த அளவுக்காவது இரத்தபாசம் இக்குலத்துக்கு இருக்கிறதா? – இது போன்ற கேள்விகளுக்கு முடிவான பதில் கிடைப்பது எளிதல்ல (*).
இருப்பினும் இதைப் பற்றி நாம் முடிவு கட்டாததால் அதிகமாக எதையும் இழந்து விடவில்லை.
ஓர் உண்மையை மட்டும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும். எங்கே நாகரீக சூரியன் முதலில் உதயமாயிற்றோ, ஆழ்ந்த சிந்தனை தனது முழுச் சிறப்புடன் எங்கு முதலில் வெளிப்பட்டதோ, அந்த உள்ளத்தில் பிறந்த மைந்தர்கள் நூறாயிரக் கணக்கானவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்த இனத்தின் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் குலச்செல்வமாகக் கொண்டாடுகிறவர்கள் இன்றும் அவற்றின் மீது உரிமை கொண்டாட ஆயத்தமாக இருக்கிறார்கள்.
மலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளையெல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாடுகளின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது; இன்றும் பாய்ந்து வருகிறது. அது சில சமயங்களில் தெளிவான முறையிலும் வேறு சில வேளைகளில் யாரும் அறியாத நுண்ணிய முறையிலும் ஓடுகின்றது. உலகிலுள்ள பண்டைய ஞானச் செல்வத்தின் பெரும்பங்கு ஒருவிதத்தில் நமக்கே சொந்தமானதாக இருக்கும்.
(*)-சுவாமிஜி ஏறக்குறைய 120 வருடங்கள் முன்பு கூறியது இது. தற்போது அகழ்வாராய்ச்சிகளும், நவீன அறிவியல் துறைகளின் பங்களிப்பும், ஒரு நூற்றாண்டு வரலாற்று ஆராய்ச்சிகளும், வேத மந்திரங்களை அளித்த ஆரியரின் தாயகம் பாரதமே என்பதையும், காலனியம் விதைத்த இனவாதக் கோட்பாடுகள் முற்றிலும் பொய்யானவை எனபதையும் அனேகமாக நிரூபித்து விட்டன என்றே கருதலாம். கவனிக்க வேண்டியது என்னவென்றால், இனவாதமும் இனத்தூய்மை வாதங்களும் உலகெங்கும் கோலோச்சிய அந்த காலகட்டத்திலும் சுவாமிஜி, அந்த கருத்தாக்கங்களை புறம் தள்ளி பாரதத்தின் பண்பாட்டுச் செழுமையையே முன்வைக்கிறார் என்பது தான்]
பகுத்தறியும் உள்ளம்:
“நாஸத: ஸத் ஜாயதே”. இல்லாததிலிருந்து (ஒரு பொருளிலிருந்து) இருப்பது என்பது உண்டாகாது.
எது இருக்கிறதோ, அதற்கு இல்லாத ஒன்று காரணமாக ஆக முடியாது. ஒன்றும் இல்லாததிலிருந்து ஏதோ ஒன்று வர முடியாது. சர்வ வல்லமையும் பெற்ற காரணகாரிய விதி இல்லாத காலமோ, இடமோ இருந்ததேயில்லை. ஆரிய இனம் எத்தனை தொன்மை வாய்ந்ததோ அத்தனை தொன்மையானது இந்தக் கொள்கை. ஆதி கவிகளாலும், தத்துவ ஞானிகளாலும் நிலை நாட்டப் பட்டுள்ள இந்த எல்லைக் கல்லின் மீது தான் ஹிந்து இன்றைக்கும் தன் வாழ்வின் திட்டத்தை எழுப்புகிறாள்(ன்).
ஆரம்ப நிலையில் இருந்த இனத்தவருக்கு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஓர் ஆர்வம் இருந்தது. அது விரைவிலேயே துணிச்சலாகப் பகுத்தாராய்ந்து பார்க்கும் திண்மை பெற்றது. தொடக்கத்தில் ஆரம்பகாலச் சிற்பியின் கை நடுக்கத்தைப் போல இந்த முயற்சி இருந்தாலும், நாளாவட்டத்தில் அந்த முயற்சி ஒழுங்கான சாஸ்திரமாக உருப்பெற்று, துணிச்சலான முயற்சியாக மாறி, வியப்பூட்டக் கூடிய பெரும் பலன்களைத் தந்தது.
இந்த இனத்தவரின் (#) துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது. சடங்குகளை ஓர் ஒழுங்கில் அமைத்தது; மாற்றியமைத்தது; சந்தேகித்ததது; மறுத்தது அல்லது விளக்கியது.
(#) இங்கு இனம் என்பது இந்துக்கள் அனைவரையும் குறிக்கிறது]
அந்தப் பகுத்தறிவால் தமது கடவுளைக் கீழ்மேலாக மாற்றினார்கள். எங்கும் நிறைந்த – எல்லாம் வல்ல – எல்லாமறிந்த – தமது பரம்பரைக்கே தந்தையாய் விண்ணில் வாழ்கின்ற – பிரபஞ்சத்தையே படைத்த கடவுளுக்கு – இரண்டாந்தர இடம் தான் தந்தார்கள்; அல்லது அவனை உபயோகமற்றவனாகக் கருதி எடுத்து வெளியே வீசி விட்டார்கள். பிறகு உலகச் சமயம் ஒன்றை (பௌத்தம்) இன்றும் பலர் பின்பற்றும் சமயத்தை, அவனில்லாமலே துவக்கினார்கள்.
பலவிதமான யாகமேடைகளைக் கட்டுவதற்காகக் கற்களைப் பல வடிவ முறைகளில் அமைத்து வைத்ததன் மூலம் ‘ஜியோமிதி’ விஞ்ஞானத்தை வளர்த்தார்கள். தமது வழிபாட்டையும், அர்க்கிய ஆகுதிகளையும் சிறிதும் காலந்தவறாமல் நடத்துவதற்காக முயன்றபோது எழுந்த வான சாஸ்திர அறிவால் உலகைத் திடுக்கிட வைத்தார்கள்.
கணித சாஸ்திரத்தை வளப்படுத்த முற்காலத்தவரோ, நவீன காலத்தவரோ செய்த பணியில், எந்த இனத்தவரையும் விட அதிகமாக ஆரிய இனத்தவரின் பங்கினை அமைய வைத்தது அந்தப் பகுத்தறிவு. ரசாயன சாஸ்திரம், மருந்தில் உலோகங்களின் கலவை, சங்கீத ஒலிகளின் ஒழுங்குமுறை, நரம்பு வாத்தியக் கருவிகளைப் புதிதாகக் கண்டுபிடித்தல் ஆகிய இந்த ஞானமெல்லாம் நவீன ஐரோப்பிய நாகரீகத்தை வளர்க்கப் பெரிதும் துணை செய்தன.
அழகான கற்பனை நீதிக்கதைகள் வழியாக குழந்தை உள்ளத்தை வளர்க்கும் விஞ்ஞானக் கலையை அப்பகுத்தறிவு கண்டுபிடிக்க வைத்தது. நாகரீகம் வாய்ந்த ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஒவ்வொரு குழந்தையும் அதனை இன்று தனது குழந்தைப் பள்ளியிலோ, பாலர் பள்ளியிலோ கற்று, வாழ்க்கை முழுவதும் அந்த நினைவு முத்திரையைக் கொண்டு செல்கிறது.
[சுவாமிஜி அவருக்கு இயல்பாக அமைந்த தேசப் பற்றால் மட்டுமே இந்தப் புகழ்மொழிகளைக் கூறவில்லை, நன்கு ஆய்ந்தறிந்த பின்னரே இவ்வாறு கூறினார் என்பது தெளிவு. அவருக்கு சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் (1835 - 1910) பாரதம் பற்றிக் கூறியதையும் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் -
“India is the cradle of the human race, the birthplace of human speech, the mother of history, the grandmother of legend, and the great grand mother of tradition. Our most valuable and most astrictive materials in the history of man are treasured up in India only!”]
கவியின் ஞானதிருஷ்டி:
ந்த இனத்தின் இந்தக் கூர்மையான பகுத்தாய்வுக்கு முன்னும் பின்னும் பட்டு உறை போட்டாற்போல, மற்றொரு மகத்தான, சிறப்பான மனசக்தி ஒன்று உள்ளது. அது தான் கவியின் ஞானதிருஷ்டி. அந்த இனத்தின் சமயம், அதன் தத்துவம், அதன் வரலாறு, அதன் அறநெறி, அதன் அரசியல் அறிவு ஆகியவையெல்லாம் கவிஞனின் சொல்லோவியமாகிய பூந்தொட்டிகளில் மலரும்படி செய்யப் பெற்றன. மொழிகளிலே அதி அற்புதமான சம்ஸ்கிருதம் (அல்லது பண்பட்ட மொழி) அந்தத் தத்துவங்களை விளக்கவும், எளிதில் கையாளவும் மற்றெல்லா மொழிகளையும் விட நன்றாகத் துணை புரிந்தது. கணிதத்திலுள்ள கடினமான உண்மைகளை வெளியிடுவதில் கூட, கேட்பதற்கு இனிமையான கவிதைகள் துணை செய்தன.
ஹிந்து இனத்தினை உள்ளூர உந்தி உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்த இரு பெரும் சக்திகளாக இந்தப் பகுத்தறியும் சக்தியும், கவிஞரின் திவ்ய திருஷ்டியுமே இருந்தன. தேசீய ஒழுக்கத்திற்கு இந்த இரண்டும் ஆதார சுருதி போல் அஸ்திவாரமாக அமைந்தன. இந்த இரண்டின் இணைப்புச் சேர்க்கை தான் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டு மேலே செல்ல இந்த இனத்தை முன் தள்ளுகிறது. இது தான் அவர்களது ஞான ஆராய்ச்சியின் ரகசியம். கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும். அத்தகைய ரம்பம் போல இருந்தது அவர்களது சிந்தனை.
வெள்ளியிலும் தங்கத்திலும் கூட அவர்கள் கவிதைகளைச் செதுக்கினார்கள். நகைகளின் எழிற்கோவை, பிரமிப்பூட்டும் சலவைக்கல் அற்புதங்கள், வர்ண ஜாலங்களின் இன்னொளி, அருமையான ஆடையணிகள் – இவையெல்லாம் இந்த உலகத்துக்கல்ல, கனவிற்காணும் அற்புத உலகத்துக்கே சொந்தமெனத் தோன்றும். இவற்றுக்கெல்லாம் பின்னணியாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தத் தேசீய சிறப்புக் குணம் வேலை செய்து வந்துள்ளது.
கலைகளும் விஞ்ஞானங்களும், ஏன், வீட்டு வாழ்க்கையில் காணப்படும் கசப்பான நிகழ்ச்சிகள் கூட, ஏராளமான கவிதைக் கருத்துக்களில் தோய்ந்திருக்கின்றன. இவை வளர்ந்து முன்னேறின. புலனுணர்ச்சிகள், புலன்களுக்கு மேற்பட்ட ஒன்றைத் தொடும் அளவுக்கு உயர்ந்து சென்றன. எது உண்மை என்று மதிக்கப் படுகிறதோ, அதுவே ரோஜா இதழ் நிறம் போல் கவித்திறன் வழியாக ஒரு மாய எழில் பெறுகிறது.
இந்த இனத்தின் ஆரம்பகாலக் காட்சி கூட இந்த குணப்பண்பு ஏற்கனவே அதனிடம் இருந்ததைக் காட்டுகிறது. இந்த குணப்பண்பைத் தன் கைக் கருவியாக அது ஓரளவுக்குப் பயன்படுத்தியது குறித்த வர்ணனையை வேதங்களில் காண்கிறோம். அந்நிலையை அடையுமுன் பலவித சமய, சமூக அமைப்புகளைத் தாண்டி அது முன்னேறி வந்திருக்க வேண்டும்.
வேத காலத்தில் ஒழுங்கான முறைப்பட்ட தெய்வ வடிவங்களைக் காண்கிறோம். விரிவான சடங்குகள் இருந்தன. பல்வேறு தொழில்கள் இருந்ததால் வழிவழியான ஜாதிகளாகச் சமூகம் பிரிக்கப் படவேண்டிய அவசியமிருந்தது. எத்தனையோ விதமான தேவைப் பூர்த்திகளும், வாழ்க்கையின் பலதரப்பட்ட சுகபோக சாதனங்களும் அப்பொழுதே இருந்தன.

எழுமின் விழிமின் – 1


எழுமின் விழிமின் 


வீன பாரததத்தின் புத்தெழுச்சிக்கும், நவீன இந்து மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட ஞான சூரியன் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாக 2013ம் ஆண்டு மலரவிருக்கிறது. பாரத தேசமும், உலகம் முழுவதும், இந்த விழாவினைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் புனித தருணத்தில் சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிகு  சிந்தனைகளை  இந்தப் புதிய தொடரில் தொகுத்து வழங்குவதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இத் தொடர் அடுத்த 10மாதங்களுக்கு சுவாமிஜியின் சிந்தனை அமுதத்தைத் தாங்கி வரும்.
இந்தத் தொடரின் பகுதிகள் முழுமையாக விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “எழுமின் விழிமின்”என்ற நூலிலிருந்து எடுக்கப் பட்டுள்ளன.
சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழா 1963ம் ஆண்டு கொண்டாடப் பட்டது. அப்பொழுது மாபெரும் சமூக சேவகராக இருந்த ஏகநாத் ரானடே அவர்கள் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பை நிறுவினார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் உலகம் போற்றும் நினைவுச் சின்னம் எழுப்பியது இந்த அமைப்பின் பெரும் சாதனையாகும். அந்த தருணத்தில் ரானடே அவர்கள் சுவாமிஜியின் சிந்தனைகள் என்ற பெருங்கடலில் இருந்து மையமான சமூக, தேசிய, ஆன்மிக சிந்தனைகளைத் திரட்டி,Arise Awake: Rousing call to the Hindu nation என்ற தொகுப்பை உருவாக்கினார். அதே வருடம் அதனைஆர்.கோபாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து “எழுமின் விழிமின்” என்ற பெயரில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 2003ம் ஆண்டு இந்த நூலின் பத்தாம் பதிப்பு வெளிவந்தது.14ம் பதிப்பு விரைவில் வர இருக்கிறது.
50 வருடங்கள் கடந்த பின்னரும் இந்தப் புத்தகம் புத்தொளியுடன் மிளிர்கிறது என்றால், அதற்கு உணர்ச்சி மயமான மொழியில் ஆர்.கோபாலன் அவர்கள் செய்த ஜீவசக்தி ததும்பும் மொழியாக்கமே முக்கியக் காரணம் என்று கூறலாம். தமிழகமெங்கும் விவேகானந்தரின் சிந்தனைகளை எடுத்துச் சென்றதில் வேறு எந்த நூலையும் விட இந்த நூலின் பங்கு மகத்தானது.
********
‘சுவாமிஜியின் உள்ளம் ஒரு பெரிய சமுத்திரம். சாதாரண சமுத்திரமன்று; சிறந்த இரத்தினாகரம். அதில் அடங்கியுள்ள சிறந்த கருத்துக்களாகிய இரத்தினங்கள் அளவிலடங்கா. அவற்றின் மதிப்பும் ஒளியும் ஒன்றும் நிலையானவை; காலத்துக்குக் காலம் மாறுபாடில்லாதவை; இந்திய மக்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிலையாக விளங்கி ஒளிரத் தக்கவை. அவற்றுள் முக்கியமானவை சில மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. முழுமையும் காண விரும்புவோர் இவை எடுக்கப் பட்ட முதல் நூலுக்குள் செல்ல வேண்டும்’
என்று பத்தாம் பதிப்பின் பதிப்புரை சொல்கிறது.
ஏகநாத் ரானடே அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் -
ஏக்நாத் ரானடே
‘சுவாமிகளின் உபதேச மொழிகளை நாம் சுருங்கக் கூறின், அவர் நமக்கு ஒரு மகா மந்திரத்தை உபதேசம் செய்ததாக் குறிப்பிடலாம். அது தான் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தேவை என்பது. தன்னம்பிக்கையானது உபநிஷத பேருண்மையை அடிப்படையாகக் கொண்டது. “நான் ஆத்மா; என்னை வாள் வெட்டாது. ஆயுதங்கள் துளைக்காது. நெருப்பு எரிக்காது. காற்று உலர்த்தாது. நான் சர்வசக்திமான்” என்று உபநிடதம் முழங்குகிறது. இந்த மந்திரத்த்தைத் தான் சுவாமி விவேகானந்தர் சதா சர்வ காலமும் நமது நாட்டினருக்கு ஆணியடித்தாற்போலப் புகட்டினார். அவர் பேசியவற்றில் எல்லாம், அவரது அருள்மொழியில் எல்லாம், இந்த மந்திரமே முழங்கிற்று. இதுவே அவரது உபதேச கீதத்தின் பல்லவியாக இருந்தது. இவ்வுண்மையின் உட்பொருளை நாம் புரிந்து கொண்டு அதற்குத் தக வாழ்வதற்கான தக்க தருணம் இதுவே. அவ்வாறு நாம் செய்தால், உலகிலுள்ள எந்த சக்தியும் நமக்குத் தீங்கிழைக்க முடியாது… ‘
‘இன்று நாடானது தனது சுதந்திரத்தையும், தனது வருங்காலத்தையும், தனது தர்மத்தையும் தொடர்ந்து பாதுகாப்பதற்காக ஆயத்தம் கொள்ள வேண்டிய நெருக்கடியான சரித்திரக் கட்டத்தில் வாழ்கிறது. இந்த வேளையில் நமது நரம்புகளில் முறுக்கேற்றவும், நமது உறுதிக்கு வலுவூட்டவும் இந்த உபதேசம் மிக அரியதாகும். உறுதுணை புரிவதாகும்..’
‘ஹிந்து தேசத்திற்கு சுவாமிகள் அருளுகிற மற்றொரு உபதேசமும் உண்டு. தமோ குணத்தை நாம் கைவிட வேண்டுமென அவர் கூறுகிறார். ஏனெனில் தமோ குணமானது பலவீனத்தையும், மூட நம்பிக்கையையும், அற்பத் தனத்தையும், சிறு விஷயங்களுக்கான பரஸ்பரச் சண்டை பூசல்களையும் உருவாக்குகிறது. இந்த இழிகுணங்களைக் கைவிட்டு ஒற்றுமை, சங்கம் சேர்த்து இணைந்து பணியாற்றுதல் ஆகிய பாறை போன்ற அடிப்படைகளின் மீது மகாசக்தியை நாம் நிர்மாணிக்க வேண்டும். இவ்வாறு தனித்தனியான நமது விருப்பங்களை ஒன்றுகூட்டி இணைத்து, நமது பழங்காலத்தையும் மிஞ்சக் கூடிய சிறப்புயர்வு வாய்ந்த வருங்காலத்தை நாம் நிர்மாணிக்க வேண்டும்..’
‘சுவாமிகளின் கட்டுரைகளும், அருளுரைகளும் தத்துவம், சமயம், சமூகவியல் ஆகிய விஷயங்களைப் பற்றி மட்டுமின்றி, கலை, சிற்பம், சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு விதவிதமான விஷயங்களையும் தாங்கியவை ஆகும். இங்ஙனம், உலகியல் துறை, ஆன்மீகத் துறை ஆகிய இவ்விரு துறைகளையும் சார்ந்து அவை உள்ளன. இத்தொகுப்பில், நமது பழங்காலச் சிறப்பை உணர்த்தும் சில பகுதிகளையும், நமது இன்றையத் தாழ்நிலையின் காரணங்களை ஆராய்ந்து நம்மை சிறப்பான வருங்காலத்தை நோக்கி உந்தித்தள்ளி, அதற்காக நம்மை ஆயத்தப் படுத்துகிற பகுதிகளையுமே குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதுவே நமது திட்டவட்டமான சிறிய உத்தேசமாகும்..’
‘சுவாமிஜியின் உபதேசச் செய்தியை எவ்வித விளக்கமோ கருத்துரையோ இன்றி அவரது சொந்தச் சொற்களாலேயே தொகுத்துப் புத்தகமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது நம் கருத்து. ஆகையால், புத்தகம் முழுவதும் சுவாமிகளின் சொந்தச் சொற்களாலேயே உருவாகியுள்ளது. தலைப்புகள், துணைத்தலைப்புகள் கொடுத்தது, விஷயங்களை ஒரு வடிவத்தில் தொகுத்து இணைத்தது, இவை மட்டும் தான் தொகுப்பாளரின் வேலை. சிற்சில இடங்களில் தெளிவு ஏற்படுத்துவதற்காக, உரிச்சொல்லுக்குப் பதிலாக பெயர்ச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது… தனித்தனியான ஒவ்வொரு பகுதியும் மேற்கோள் குறியின்றி ஏன் உள்ளது என்பதன் காரணம் வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரியும், ஏனெனில் ஒரு விதத்தில் இந்த நூல் முழுவதுமே மேற்கோள் குறிக்குட்பட்டுத் தான் அமைந்துள்ளது..’
********
இந்தப் புத்தகம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது:

(1) உபதேச மொழி:
நமது தேசத்தின், சமூகத்தின், தர்மத்தின் நிலை பற்றி சுவாமிகள் கொண்டிருந்த மையமான கருத்துக்களை முக்கியமாகக் கொண்ட பகுதி இது.

(2) பிரசங்கங்கள், உரைகள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள்:
சில முக்கியமான விஷயங்கள் குறித்து சுவாமிஜி கொண்டிருந்த கருத்துகளை வாசகர்களுக்கு உணர்த்தும் பகுதி இது. உபதேச மொழி பகுதியுடன் தொடர்புள்ள இக்கருத்துக்களை முதல் பாகத்தில் பொருத்தி வைக்க முடியவில்லை, அல்லது அங்கு சுருக்கமாக அவை கூறப்பட்டிருக்கும்.

(3) சில கண்ணோட்டங்களும் கண்டனங்களும்:
சுவாமிஜி விஷயங்களை அமைதியாகவ்ம், அறிவு பூர்வமாகவும் அணுகி ஆராய்ந்தார். ஆனால் அதற்குப் பின்னணியாக மகத்தான ஆவேசமும் உணர்ச்சியும் அவரை ஆட்டுவித்தன. இப்பகுதியில் உள்ளவை வாசகர்களுக்கு சுவாமிஜியின் இதயத் துடிப்பையும், அவரது மனம் வேலை செய்த முறையையும் சித்தரித்துக் காட்டுவதற்காகத் தொகுக்கப் பட்டவையாகும்.
(4) ஆண்மை ஊட்டுதல் அல்லது ஊழியர்களை உருவாக்குதல்:
சுவாமிகள் பல இடங்களில் தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விழைபவர்களுக்கான மன அமைப்பைப் பற்றியும், மனதுக்கும் அறிவுக்கும் தேவையான சில குணங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒற்றுமை இயக்க அமைப்பு, தலைமை தாங்கும் குணம், நிறைவான வாழ்க்கையின் ரகசியம், பணிபுரியும் கலை ஆகிய விஷயங்கள் குறித்த, நடைமுறையில் தனிமனிதருக்கு வழிகாட்டும் உயர் படிப்பினையாக அமைந்த கருத்துக்கள் இப்பகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன.
இந்தத் தொகுப்பு நூலின் வாசகர்கள் இதன் மூலம் ஊக்கம் பெற்று விவேகானந்தரின் சிந்தனைகளை, முழுமையாக முதல் நூல் வடிவில் கற்க ஆர்வமும், ஊக்கமும் பெற வேண்டும் என்பதையே தனது உள்ளக் கிடக்கையாக ரானடே அவர்கள் கூறியிருந்தார். நாமும் அதையே வழிமொழிகிறோம்.

*****
|| ஓம் ||
முதல் பாகம் – உபதேச மொழி
தெய்வீகச் செய்தி
நான் கூறுவதைக் கவனத்திற் கொள்க. ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதருக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்து சமயப் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! – யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட – அவர், அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.
கவனத்திற் கொள்ளுங்கள். உங்களது நாட்டுக்கு நன்மை செய்ய நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆகவேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக் கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து இரத்தத்தைக் கவனியுங்கள். உங்களைத் தாக்கிப் புண்படுத்த அவர்கள் நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குச் சாபமாரி பொழிந்தாலும், நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையே திருப்பியளிக்க வேண்டும். உங்களை அவர்கள் வெளியே துரத்தினால், மகா சக்திசாலியான அந்த சிங்கத்தைப் போல, குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய லட்சியத்தையே நாம் எப்போதும் நம் முன் வைத்திருப்போமாக.

நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையில்லும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.– 1

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்

சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்


கற்றுக்கொள்! ஆனால் அடிமையைப்போல பின்பற்றி நடிக்காதே:
அவ்வாறாயின் மேல்நாட்டினரிடமிருந்து கற்றுக்கொள்ளத் தக்கது நமக்கு ஒன்றுமேயில்லையா? இப்பொழுது பெற்றுள்ளவைகளைவிட மேலானவற்றை அடைய நாம் முயலுவதும் உழைப்பதும் தேவையில்லையா? நாம் முழுமை அடைந்துவிட்டோமா? நமது சமூகம் யாதொரு குறையுமின்றி முற்றிலும் மாசற்றதாய் உள்ளதா? இல்லை, இல்லை. நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளன. நாம் சாகுமளவும் முன்னைக்காட்டிலும் மிக உயர்ந்த, புதிய பொருள்கள் பெறக் கட்டாயம் பாடுபட வேண்டும். பாடுபடுவதே மனித வாழ்க்கையின் பயன். “வாழுமளவும் நான் கற்கிறேன்” என்று சொல்வார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று கருதுகிற மனிதனோ, சமூகமோ மரணத்தின் வாய்க்குள் முன்னரே புகுந்துவிட்டதாக அறிந்துகொள்ளுங்கள். ஆம்! மேல்நாட்டவரிடமிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உள்ளன. ஆனால் அஞ்ச வேண்டுவனவும் உள்ளன.
அற்ப அறிவுள்ள ஒருவன் ஸ்ரீ ராமகிருஷ்ணரது முன்னிலையில் ஹிந்து சாஸ்திரங்களை எப்பொழுதும் குறைகூறுவது வழக்கம். அவன் ஒருநாள் பகவத் கீதையைப் புகழலானான். அதைக் கேட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணர், “யாரோ ஓர் ஐரோப்பியப் பண்டிதர் கீதையைப் புகழ்ந்துள்ளார் போலும்! அதனால் இவனும் அந்த மாதிரியே புகழ்கிறான்” என்றார்.
ஓ! பாரதநாடே, உன்னை பயமுறுத்தும் இன்னல் இதுவே. மேல்நாட்டாரைப் பின்பற்றி நடிக்கும் மயக்கத்தில் நீ மூழ்கியிருக்கிறாய். ஆதலால் எது நல்லது எது தீது என்பதை நீ ஆராய்ச்சியாலோ, பகுத்தறிவாலோ, விவேகத்தாலோ அல்லது சாஸ்திரங்களின் அபிப்ராயத்தைக் கொண்டோ தீர்மானிக்கப் போவதில்லை. வெள்ளையர் புகழ்கிற, விரும்புகிற எந்த ஒரு கருத்தும் அல்லது பழக்க வழக்கமுறையும் நல்லனவாகின்றன. அவர்கள் வெறுக்கிற, இகழ்கிற விஷயங்கள் எவையானாலும் அவை தீயனவாகின்றன. அந்தோ! இதைக்காட்டிலும், அறிவீனத்தை நிரூபிக்கக்கூடிய மிகத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்?
அவர்களுக்கு உணவு ஆவது நமக்கு நஞ்சு ஆகலாம்:
நமது இயல்புக்குத் தக்கபடி நாம் வளர்ந்து முன்னேற வேண்டும். அந்நிய நாட்டுச் சமூகங்கள் நம்மீது ஒட்டவைத்திருக்கும் முறைகளின் வழியில் நாம் செயல்பட முயலுவது வீண் ஆகும். அது நடவாது நம்மைத் திரித்து, மாற்றிச் சித்திரவதை செய்து பிற தேசங்களின் உருவில் ஆக்க முடியாது. இங்ஙனம் அருளிய ஈசனை நாம் போற்றுவோமாக. இதனால் பிற இனத்தவரின் சமூக ஏற்பாடுகளை நான் கண்டிக்கவில்லை. அவை அவர்களுக்கு நல்லது; நமக்கல்ல. அவர்களுக்கு அமுதம் ஆவது நமக்கு நஞ்சு ஆகலாம். நாம் கற்கவேண்டிய முதற்பாடம் இது. இவர்களின் சாஸ்திர ஆராய்ச்சிகளுக்கும் சமூக ஏற்பாடுகளுக்கும் அவர்களது பரம்பரையான கொள்கைகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் தற்கால நிலையை அடைந்திருக்கின்றனர். நமக்கு நம்முடைய புராதன அனுஷ்டான முறை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கர்மபலன் பின்னணியாக இருக்கிறது. நாம் நமது இயற்கைக்கு ஒத்த முறையில்தான் வளர்ந்து முன்னேற வேண்டும். நமது பாட்டையில்தான் நம்மால் ஓடமுடியும்.
இருவிதமான நாகரிகங்கள்:
சமூக வாழ்க்கையை நிர்மாணிப்பதற்காக உலகத்தில் இருவித முயற்சிகள் செய்யப்பட்டன. ஒரு முயற்சி சமயத்தை ஆதாரமாகக் கொண்டும், மற்றது சமூகத் தேவையை அடிப்படையாகக் கொண்டும் நிறுவப்பட்டன. ஒன்று ஆன்மிகத்தின் அடிப்படையிலும் மற்றொன்று உலகாயத வாதத்தின் அஸ்திவாரத்தின் மீதும் எழுப்பப்பட்டன. ஒன்று மானசீகத் தத்துவத்தின் அடிப்படையிலும் மற்றது பிரத்தியட்ச வாதத்தின் அடிப்படையிலும் கட்டப்பட்டன. ஒன்று இந்தச் சிறிய உலகிலுள்ள சிருஷ்டியைத் தாண்டித் தன் பார்வையைச் செலுத்துகிறது. இவ்வுலக வாழ்க்கையைத் தவிர மறு உலகிலும் வாழ்க்கையைத் துவக்குவதற்குத் துணிவுடனிருக்கிறது. இரண்டாவது இவ்வுலகத்துலுள்ள விஷயங்களில் நிலைகொண்டு இங்கு உறுதியான ஆதாரத்தைக் காண வேண்டுமென எதிர்பார்க்கிறது.
ஒவ்வொன்றிற்கும் அதனதற்கு இசைந்த பாணி உண்டு. சமய ரீதியாக, உள்நோக்கி வினவுகின்ற பாரதத்துக்கும், விஞ்ஞான ரீதியான, வெளியில் நோக்குகின்ற மேல்நாட்டுக்கும் தனித்தனி பாணியில் மரபுகள் அமையும். சமூக முன்னேற்றத்தின் மூலம் ஆன்மிகத் தத்துவத்தின் ஒவ்வொரு சிறு அம்சத்தையும் மேலைநாடு பெற விரும்புகிறது. கீழ்த்திசை நாடு ஆன்மிகத் தத்துவத்தின் மூலம் சமூக சக்தியின் ஒவ்வொரு அம்சத்தையும் பெற விரும்புகிறது. ஆகவேதான், பாரதத்தின் சமயத்தை முதலில் நசுக்கி அகற்றினால் ஒழிய, சீர்திருத்தத்துக்கு வேறு வழியில்லை என்று நவீனச் சீர்திருத்தவாதிகள் கருதினார்கள். அவர்கள் முயன்று தோல்வியுற்றார்கள். ஏன்? ஏனெனில் தமது சொந்த சமயத்தைப் பற்றி அவர்களில் எவரும் ஆராயவில்லை. சமயங்கள் அனைத்துக்கும் தாயானவளைப் புரிந்துகொள்ளத் தேவையான பயிற்சியை எவரும் பெறவில்லை.
ஹிந்து சமூகத்தை முன்னேற்றுவதற்காக அதனுடைய சமயத்தை அழிப்பது தேவையில்லை என நான் ஆதாரபூர்வமாகக் கூறுகிறேன். சமூகம் இன்றுள்ள இழிநிலை சமயத்தின் காரணமாக ஏற்பட்டதில்லை; சமூக நன்மைக்காகச் சமயமானது எந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டுமோ அந்த முறையில் பயன்படுத்தப்படாமையே இழிவுக்குக் காரணம்.
இணக்கம் தேவைதான், ஆனால் பாரதம் ஐரோப்பாவாக ஒருபோதும் ஆக முடியாது! பாரதத்திலுள்ள சமூக ஏற்பாடுகளைப் புதிதாக மாற்றி இணக்கமுண்டாக வேண்டுமென்று புதிய சந்தர்ப்பச் சூழ்நிலைகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. கடந்த முக்கால் நூற்றாண்டாகப் பாரதம் சீர்திருத்தச் சங்கங்களாலும் சீர்திருத்தவாதிகளாலும் நிறைந்து பொங்கி வருகிறது. ஆனால் அந்தோ! அவர்கள் ஒவ்வொருவரும் தோற்றுப்போனது நிரூபணமாகி விட்டது. இவர்களுக்கு இரகசியம் தெரியாது. கற்க வேண்டிய மகத்தான படிப்பினையை அவர்கள் கற்கவில்லை. அவர்கள் தமது அவசரத்தில் சமூகத்தில் காணப்படும் குறைகளுக்கெல்லாம் பொறுப்பைச் சமயத்தின் மீது சுமத்தினார்கள். ஒரு கதையில் ஒருவன் தனது நண்பனின் நெற்றியில் உட்கார்ந்திருந்த கொசுவைக் கொல்லவிரும்பிக் கொடுத்த பலமான அடியில் கொசுவுடன் நண்பனும் இறக்கத்தக்க நிலை ஏற்பட்டதாம். அதுபோலத்தான் இவர்கள் நிலையும். ஆனால் இந்த விஷயத்தில் அதிர்ஷ்டவசமாக, அந்தச் சீர்திருத்தவாதிகள் அசைக்கமுடியாத கற்பாறை மீதுதான் மோதிக்கொண்டார்கள். மோதிக்கொண்ட அதிர்ச்சி வேகத்தில் அடியோடு நசுக்குண்டு மறைந்தார்கள். தவறான வழியில் முயற்சி நடத்தித் தோற்றுப்போன அந்த உயர்ந்த தன்னலமற்ற ஆத்மாக்களைப் பாராட்டுகிறேன். சீர்திருத்தவாதியின் ஆவேச மனோவேகம் மின்சார அதிர்ச்சி போல ஆகி, தூங்குகிற இந்த பிரம்மாண்டமான சமூகத்தை எழுப்ப அவசியமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் நிர்மாணிப்பவர்களாக இராமல், தகர்க்கிறவர்களாக இருந்தனர். ஆகவே அவர்களே அழிந்துபோகும் தன்மையினராதலால் மடிந்தனர்.
அவர்களை நாம் ஆசீர்வதிப்போம். அத்துடன் அவர்களது அனுபவத்தின் மூலம் இலாபமடைவோம். வளர்ச்சி எல்லாமே உள்ளுக்குள்ளேயிருந்து வெளியே வருகிற வளர்ச்சிதான் என்ற பாடத்தை அவர்கள் கற்கவில்லை. உயிர்கள் வளர்ச்சி அடைவதற்கு முன் உள்ளே சுருங்குகின்றன. எல்லாப் பரிணாம வளர்ச்சிகளும் அதற்குமுன் ஏற்பட்ட உள்சுருக்கத்தின் வெளித்தோற்றம்தான். விதையானது தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்ச பூதங்களிலிருந்து ஜீவரசத்தை உறிஞ்சி ஜீரணிக்க முடியும். ஆனால் தனது இயல்புக்குத் தகுந்த மரத்தையே அது வளர்க்கிறது. ஹிந்து இனம் மறைந்து போக வேண்டும்; இந்த நாட்டைப் புதிய ஓர் இனம் பிடித்துக் கொள்ள வேண்டும்; அப்படி ஒருக்காலும் ஏற்பட முடியாது. அப்படி நிகழ்ந்தாலொழிய கிழக்கிலோ மேற்கிலோ நீ எவ்வளவு முயன்றாலும் பாரதம் ஐரோப்பாவாக ஒருநாளும் மாற முடியாது.
மற்ற தேசங்களிலிருந்து நாம் கற்கவேண்டிய ஏராளமான பாடங்கள் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல படிப்பினைகளை நாம் கற்க வேண்டும். ஆனால் நமது தற்காலச் சீர்திருத்த இயக்கங்கள் பலவும் ஆலோசியாமல் மேல்நாட்டுவழித் துறைகளையும் வேலைமுறைகளையும் பின்பற்றி வெறும் பிரதிபிம்பமாக இருக்கின்றன. நிச்சயமாகவே பாரதத்துக்கு அவை பொருந்தமாட்டா. ஆகவேதான் நமது தற்காலச் சீர்திருத்த இயக்கங்களெல்லாம் பலனற்றுப் போயின. மக்கள் என்ற ரீதியிலே சரித்திரபூர்வமாக நாம் தேடிப் பெற்றுள்ள குணப்பண்பை நாம் காக்க முயல வேண்டும்.
மாறாத மையப்புள்ளியைச் சுற்றி மாறுகின்ற வெளிவடிவங்கள்:
ஓவ்வொரு காரியத்திலும் அத்தியாவசியமானவற்றுக்கும் தேவையில்லாதவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அத்தியாவசியமானவை எல்லாம் நிரந்தரமானவை. தேவையில்லாதவற்றுக்குச் சில காலத்துக்குத்தான் மதிப்பு இருக்கும்.
ஜாதிகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. சடங்குகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. வெளி அமைப்புகளும் அவ்வாறேதான். மூலதத்துவம் அதன் சாரம் மாறுவதில்லை. நமது சமயத்தை நாம் வேதங்களில் படிக்கவேண்டும். வேதம் விதிவிலக்கு. அது ஒருபோதும் மாறாது. மற்ற ஒவ்வொரு புத்தகமும் மாறவேண்டும். வேதங்கள் அநாதியாதலால் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். ஸ்மிருதிகளுக்கு முடிவு உண்டு. காலம் உருண்டோட ஓட, ஸ்மிருதிகள் மேலும் மேலும் இல்லாமற் போய்விடும். ரிஷிகள் வருவார்கள். அவர்கள் சமூகத்தை மாற்றி முன்னைவிட நல்ல பாதைகளில் செலுத்துவார்கள். காலத்தின் தேவைக்குத் தக்க கடமைகளிலும் தகுந்த பாதைகளிலும் செலுத்துவார்கள். அப்படி இல்லையேல் சமூகம் உயிர் வாழ்வது இயலாது.
இந்த நாட்டில் கடந்த காலத்தில் பெரிய காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதைவிடப் பெரிய காரியங்களை எதிர்காலத்தில் செய்வதற்கு இடமிருக்கிறது. நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கிற இடத்திலேயே தேங்கிநிற்க முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள் என்பது திண்ணம். நாம் ஒரு இடத்தில் தேங்கி நின்றால் அது சாவுக்கு அறிகுறி. ஒன்று, நாம் முன்செல்ல வேண்டும்; அல்லது பின்செல்ல வேண்டும். ஒன்று நாம் முன்னேற வேண்டும்; அல்லது தாழ்வுற வேண்டும். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் மகத்தான செயல்கள் செய்தார்கள். நாம் இன்னும் அதிகமான பலம் பெற்று அவர்கள் செய்த காரியங்களைவிட உயர்ந்த காரியங்களைச் செய்ய வேண்டும். பெருத்த சாதனைகளைத் தாண்டி அணிவகுத்துச் செல்ல வேண்டும். நாம் எங்ஙனம் பின்சென்று நம்மைத் தாழ்த்திக்கொள்ள முடியும்? அது இயலாது. அப்படி நிகழக் கூடாது. பின்செல்வது தேசியத் தாழ்வுக்கும் சாவுக்கும் வழியாகும். ஆகவே நாம் முன்னால் சென்று, முன்னை விட மகத்தான செயல்களைச் செய்வோமாக. இதுதான் நான் உங்களுக்குக் கூற வேண்டியது.
காலத்தால் மதிப்பு பெற்ற பாரதநாட்டுச் சமூக அமைப்பு முறைகள்:
நமது ஜாதிகளும், நமது சமூக அமைப்பு முறைகளும், வெளிப்பார்வைக்கு நமது சமயத்துடன் இணைந்திருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. தேசம் என்ற ரீதியிலே நம்மைப் பாதுகாக்க இந்தச் சமூக ஸ்தாபனங்கள் தேவைப்பட்டு வந்துள்ளன. தற்காப்புக்கான தேவை இல்லாதொழியும்போது அவை இயற்கையான மரணத்தை அடையும்.
ஆனால் வயது முதிர்ச்சியடைய அடைய காலத்தால் மதிப்புப் பெற்ற இத்தகைய பாரத நாட்டு ஸ்தாபனங்களைப் பற்றி முன்பிருந்ததைவிட நல்ல தெளிவு கொள்கிறேன். அவற்றில் பலவும் உபயோகமற்றவை, தகுதியற்றவை என நான் எண்ணிய காலம் உண்டு. ஆனால் வயது முதிர்ச்சி பெறப்பெற அவற்றில் எந்த ஒன்றையும் திட்டுவதற்கு அதிகமான தயக்கமும் அதைரியமும் அடைகிறேன். ஏனெனில் அவை ஒவ்வொன்றும் பல நூற்றாண்டு அனுபவங்களின் வடிவம் ஆகும். நேற்றுப் பிறந்த ஒரு குழந்தை, நாளை மறுதினம் விதிப்பயனால் சாகப் போவது, என்னிடம் வந்து எனது திட்டங்கள் அனைத்தையும் மாற்றிக்கொள்ளச் சொல்லுகிறது. அந்தக் குழந்தையின் யோசனையைக் கேட்டு எனது சுற்றுப்புறச் சூழ்நிலையை அதனுடைய கருத்துப்படியே மாற்றிக்கொள்வேனாயின் நான்தான் முட்டாளே தவிர, வேறு எவருமில்லை.
வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வருகிற ஆலோசனைகள் இது போன்றதேயாகும். அந்த மேதாவிகளிடம், “உங்களுக்காக நீங்களே சாசுவதமான சமூகத்தை நிர்மாணித்துக் கொண்ட பிறகு நீங்கள் கூறுவதை நாங்கள் கேட்போம். உங்களால் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தாற்போல் ஒரு கருத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை. சண்டையிட்டுத் தோற்கிறீர்கள். வசந்த காலத்தில் தோன்றும் விட்டில் பூச்சிகளைப் போலப் பிறந்து, அவற்றைப் போலவே ஐந்து நிமிடங்களில் மடிகிறீர்கள். நீர்க் குமிழிகளைப் போல மேலே வந்து, அது போலவே வெடித்துப் போகிறீர்கள். முதன் முதலில் எங்களுடையதைப் போன்று சாசுவதமான ஒரு சமூகத்தை நிறுவுங்கள். பற்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் வலிமை குன்றாமல் வாழக்கூடிய சட்டங்களையும் ஸ்தாபனங்களையும் முதலில் அமையுங்கள். அதன் பிறகுதான் இந்த விஷயத்தைக் குறித்து உங்களிடம் பேசுவதற்கான தக்க தருணம் வரும். நண்பனே, அதுவரை நீ மயக்க நிலையிலுள்ள சிறு குழந்தைதான்” என்று கூறுங்கள்.
மனிதகுல திட்டத்துக்கான நமது திட்டமும் அதன் நிறைவேற்றமும்:
தற்காலிகமான சமூகச் சீர்திருத்தத்தைப் பிரசாரம் பண்ணுகிறவன் அல்ல நான். அல்லது சிறு சிறு குறைகளை நீக்கவும் நான் முயன்று கொண்டிருக்கவில்லை. “முன்னே செல். மனித குல முன்னேற்றத்துக்கான திட்டத்தை நமது மூதாதையர்கள் மிக உத்தமமான முறையிலே வகுத்து வைத்துள்ளார்கள். நடைமுறையில் அதனை நிறைவேற்றுவதற்காக வேலை செய்து அதனைப் பூரணமாக்கு” என்று மட்டும் நான் கூறுகிறேன். “மனிதன் ஏகப் பொருளாவான்; அவனோடு தெய்வீக இயல்பு கூடப் பிறந்ததாகும் என்ற வேதாந்தக் கருத்துகளை நீங்கள் நன்றாக அநுபவித்து உணர்ந்து வேலை செய்யுங்கள்” என்று மட்டும் கூறுகிறேன்.
நமது பண்டைய சட்ட நிர்மாணகர்கள், ஜாதிகளை உடைப்பவர்களாகவும் இருந்தனர். ஆயினும் அவர்கள் நமது தற்காலச் சீர்திருத்தக்காரர்களைப்போல இருக்கவில்லை. ஜாதியை உடைப்பது என்றால் ஒரு நகரத்திலுள்ள எல்லா மக்களும் ஒன்றாக உட்கார்ந்து மாட்டிறைச்சியும் மது பானமும் பருக வேண்டும்; எல்லா முட்டாள்களும் பைத்தியக்காரர்களும் எந்த இடத்திலாவது தாம் தேர்ந்தெடுக்கும் யாரையாவது திருமணம் செய்துகொண்டு நாடு முழுவதையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக ஆக்கவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. ஒருநாட்டின் நல்வளம், அந்த நாட்டு விதவைகளுக்கு எத்தனை கணவன்மார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படவேண்டும் என்றும் அவர்கள் நம்பவில்லை. மேற்கூறிய செயல்முறைகளால் வளமுற்ற நாட்டை இனிமேல்தான் நாம் காணவேண்டும்.

Wednesday 30 January 2013

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்


Vivekananda Rock
நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

இந்து மதம்


Vivekananda- Chicago 1893

மாநாட்டுப் பிரதிநிதிகளுடன் சுவாமிஜி

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.

காவியில் பூத்த கனல்

காவியில் பூத்த கனல்


Vivekananda 5
கதிரையும் நிலவையும் தாங்கும், விரிந்த மன வானம்…
இதயத்தை விட்டு என்றும் இணைபிரியாத பாரத மண்ணின் பற்று…
பொய், போலி, புரட்டு, பொறாமை அவலங்களைப் பொசுக்கும் பெரு நெருப்பு…
ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏங்குபவரை அன்பு இறகால் வருடும் தென்றல்…
இந்திய மண்ணின் ஈரம் காக்கவும், வேதநெறி வளம் பெருகவும் வெள்ளமாகப் பாயும் தண்ணீர்…
- இந்தப் பஞ்சபூத விந்தைகளின் இணைப்புத் தான் சுவாமி விவேகானந்தர்.